Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Sunday, July 7, 2013

ஒரு பொய்


ஒரு பொய் 

ஒரு பொய் 
என் நெஞ்சைப் பிளந்தது 
அதைப் புன்முறுவலுடன் 
ஏற்றுக்கொண்டேன் 

என் கண்களை 
அழக்கூடாது என்று 
கேட்டுக்கொண்டேன்
ஆனால் 
விழித்திரையின் 
வேறொரு பக்கமிருந்து 
கண்ணீர் பொத்துக்கொண்டது 

ஒரு குற்றச்சாட்டு 
வேரறுந்த கொடியின் 
நுனிக் கொழுந்து போல் 
என்னை ஆக்கிவிட்டது 

ஒரு மின்னல் ரம்பம் 
என்னை இரண்டாக 
வகிடு எடுத்தது  
நான் 
மன்புழுவாய்த் துடித்தேன் 

நான்கைந்து கத்திகள் 
அடிவயிற்றில் இறங்கியது
நானோ 
இன்னும் ஆழமாக 
குத்தச் சொல்லி மன்றாடினேன் 

ஒரு துரோகத்தைக் கொண்டாடி 
அதை வென்று எடுத்தேன் 

ஆனால் 
இந்தக் கண்ணீர் மட்டும் 
எங்கிருந்து வருகிறது 
என்று தெரியவில்லை 

கண்களில் இருந்து 
வருவது மட்டுமே 
கண்ணீர் அல்ல  

இறந்து போவது மட்டுமே 
இறப்பும் அல்ல 

#
வே.ராமசாமி 

Sunday, June 2, 2013

மோகினி


மோகினி
கண்ணீரில் தீப்பொறி தெறிக்க வைக்கிறாள் 

மோகினி 
வேப்பம்பழச் சேலைகட்டி ஆடுகிறாள் 

மோகினி 
புன்னகையில் படுகொலை செய்கிறாள் 

மோகினி 
நெஞ்சைப் பிளந்து சுகமாக வசிக்கிறாள் 

மோகினி 
இதயத்தைப் பழுக்க வைத்துச் சம்மட்டி அடிக்கிறாள் 

மோகினி 
வெப்பாலையில் பெருமழை பொழிகிறாள் 

மோகினி 
என் மூச்சைக் குடிக்கிறாள் 

மோகினி 
என் உள்ளங்கையில் நடனமாடுகிறாள் 

மோகினி 
நெஞ்சில் குதியாளம் போடுகிறாள் 

மோகினி 
மண் வீட்டில் வாசஸ்தலம் கொள்கிறாள் 

மோகினி 
மாடுகளுக்குத் தீவனமிடுகிறாள் 

மோகினி 
எதிர்பாராதவிதமாக வீட்டு வாசப்படி வருகிறாள் 

மோகினி 
சொற்களின் பல்லை உடைக்கிறாள் 

மோகினி 
சூறைக்காற்றில் தேடி வர வைக்கிறாள் 

மோகினி 
மானத்தை ஒரு பொருளாகக் கொள்ளச் செய்தாள் இல்லை 

மோகினி 
உறவினர்கள்போல் உற்றார் (கொடியவர்) எவருள்ளார் ?

மோகினி 
அலைமோத வைக்கிறாள் 

மோகினி 
ஒரு கானல் வழியில் கண்ணீரைக் கொண்டு வந்தாள் (வாராள் )

மோகினி 
உன்மத்தம் கொள்ள வைக்கிறாள் 

மோகினி 
சிறிய நாட்களில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகிறாள் 

மோகினி 
சிறிய உயிரை பல்லாங்குழி ஆடுகிறாள் 

மோகினி 
சிதிலமடையச் செய்கிறாள் 

மோகினி 
செழிக்கச் செழிக்கச் செய்கிறாள் 

மோகினி 
அற்பர்களை பெரும் பொருளாக்குகிறாள் 

மோகினி 
நல்லவனை மன்றாட வைக்கிறாள்

மோகினி 
உறுதி கொள்ள வைக்கிறாள் 

மோகினி 
வெல்லத் தூண்டுகிறாள் (வெல்ல வைத்து விடுவாள் )

மோகினி 
எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் எரிகிறாள் 

மோகினி 
என்ன செய்தும் தணிந்தாள் இல்லை (நினைவுகள் ) 

மோகினி 
(இப்படி)ஒரு கவிதைக்குப் பின் கொஞ்சம் தணிகிறாள் 

மோகினி 
பிற்பாடு விரி காற்றாவாள் 

வே.ராமசாமி  

Saturday, April 6, 2013

கடலுக்கு மேலே இருக்கும் நிலா

கடலுக்கு மேலே இருக்கும் நிலா 
####

கடலுக்கு மேலே இருக்கும் நிலா 
தரைக்கு மேலே உள்ள நிலா அல்ல 

நான் நடந்தால் 
அது என்னோடு வரவில்லை 
நான் அதோடு போய்விட்டேன் 

#####

அலைகளின் முதுகில்
அது ஒரு ஆரஞ்சுப் பழம்

துறைமுகக் கப்பலில்
அது ஒரு விளக்கு

மேகத்தின் புதைகுழியில்
அமிழ்ந்திய மஞ்சள் கண்

ஏழு நிறங்களில்
எரியும் வானவில்லருகே
அது ஒரு தீக் கங்கு

வானத்திற்கு
அது ஒரு வட்டச் சன்னல்


####

கடலுக்கு மேலே இருக்கும் பிறை நிலா
தரைக்கு மேலே இருக்கும் பிறை நிலா அல்ல

சொல்லப் போனால்
அது அவரைப்பூ நிலா

இன்னும்
சொல்லப் போனால்
அது ஒரு பொன்சிட்டு

#######

Friday, January 14, 2011

பசுவும் அம்மாவும்

பசுவும் அம்மாவும்

எத்தனை மாதம் கழித்துப் போனாலும்
பசுவுக்குத் தண்ணிகாட்டி விட்டுத்தான்
நமக்குச் சோறு வைக்கிறாள்

ஆட்டு உரலில் நக்கிய வாய்மட்டி காயாமல்
பெருமூச்சில் அது பீய்ச்சியடிக்கும்
தவிட்டுத் துளிகளில் நனைந்தாலும்
செல்லமாகத்தான் தட்டுகிறாள் மன்னையில்

வந்திருக்கிறானே என வீடிராமல்
வால்போல் மூக்கணாங் கயிறிழுத்து
காட்டில் அவளின் அன்றையத் தடங்களைப்
பதிக்காமல் திரும்பமாட்டாள்
மாலைவரை

அச்சுவெல்லத் தேநீராற்றுகையிலும்
சிணுக்கோலியில் தன் கூந்தல் நீவுகையிலும்
பசுவின் காம்பாகத்தான்
பயன்படுத்துகிறாள் விரல்களை

புறப்படும் தேதிசொல்லிக் கலங்கடித்தால்
அதன்குரல் கேட்கும் வரைதான் எல்லாம்

எப்படி முயன்றாலும் முடியாது
ஒரு பசுவும்கன்றும் இருக்கும் வீட்டில்
அம்மாவுக்குச் செல்லப்பிள்ளையாக

வே.ராமசாமி
"கிணற்றுக்குள் முளைத்த மருதாணி "என்ற எனது தொகுப்பிலிருந்து

Tuesday, January 11, 2011

எனது பழைய வீடு


எனது பழைய வீடு

எனது பழைய வீட்டில்
ஆடிக்காற்றில் பறந்த ஓடுகள்
ஆகாயத்தின் சில வாசல்களை
எனக்குத் திறந்து விடும்

இரவில் பார்த்தால்
நிலவு தலைகீழாய்ச் சென்று
திகைக்க வைக்கும்

கோரைப்பாயில் படுத்து
நட்சத்திரங்களை எண்ணுகையில்
முதுகினடியில்
உறுத்திக்கொண்டிருக்கும்
ஆட்டாம் புழுக்கைகள்

சாரலென்றால்
சாணம் மணக்கும் தரையில்
முத்தங்களைப் பதிக்கும்

பெருமழையென்றால்
ஓட்டுத் தகரத்தில் கொட்டடித்து
அடிக்காதே என்று
கெஞ்ச வைத்து விடும்

வானவில்லென்றால்
தொடுகிற உயரத்தில்
வந்து நிற்கும்

மேகங்களை அண்ணாந்தால்
அவற்றின் உள்ளங்கால்களைக்
காட்டிச் செல்லும்

சூரிய ஒளிக் கோடுகள்
எனக்கொரு ஊஞ்சலைக்
கொண்டு வரும்

பொந்து எலிகள் என்னோடு
பாதிப் பகையும் பாதி சிநேகமும்
வளர்த்துத் திரியும்

அடிக்கடி வரும்
விருந்தினர்கள் என்றால்
பாம்புகளைச் சொல்ல வேண்டும்

தீடீர் விருந்தினர் என்றால்
வீட்டினுள் முளைத்த
தும்பைகளைச் சொல்ல வேண்டும்

மூதாதையரின்
ஒரு முகம் போலவோ
அநாதி காலத்தையும் தாண்டிய
ஒரு பெருமரம் போலவோ
எனது பழைய வீடு
என்னுள் உறைகிறது

எனது நிறம்
எனது பழைய வீட்டின் நிறம்
எனது வாசம்
எனது பழைய வீட்டின் வாசம்
எனது ஞாபகம்
எனது பழைய வீட்டின்
அடுப்பில் கனலும் கங்குகள்
எனது பழைய வீட்டினுள்
இருப்பதுவே
நான் விரும்பும் நாடு

வே..ராமசாமி
நன்றி
தை; இதழ் ஆறு 2011
நீலமணி சிறப்பிதழ்

Friday, January 7, 2011

மழை வேட்டல்

நின் உதடு

பெரிது

பிரபஞ்சம் முழுவதும்

முத்தமிட ஏதுவானது

இங்கே

விசும்பும் கணம் நோக்கி

வேர்முடிச்சுகளில்

கண்ணீர் வாங்கி

புழுங்கி அழுகிறதுநிலம்

வெப்பங்குடித்து

மேனி சுருங்கி

கிழவியாயின தாவர இலைகள்

நீர் வேட்கையில்

வியர்வைத்துவாரம்அடைந்து

நாற்றமெடுக்கிறது

மனிதர் குருதி

தகிக்கும்கதிரொளியில்

உன் நீர்மைத்துளிகளைக்கண்ணுற்று

கழுத்தை நெரித்துபெய்யச் சொல்ல

இயலாத நான் -

வாடிய புளியமரத்தடியில்

ஈரத்துணியாய்என்னை

கசக்கிப்பிழியுமுன்

நீபொழி

பேரோலமெடுத்து

முத்தமிடு!-

வே. ராமசாமி

Tuesday, December 28, 2010

துடிப்பு

வற்றிய குளத்தின்
களிமண் சகதியில்
துள்ளித் துள்ளித் விழுவது
மீனின் துடிப்பா
குளத்தின் துடிப்பா?
வே.ராமசாமி

Thursday, August 19, 2010

புளியமரப் பொழுது

புளியமரப் பொழுதின் பகல் ஞாபகங்களின்
நிழல் நடுவே மின்னுகிறது தங்க வெயில்

எல்லாக் காலத்திலும் பறவைகள்
வெண்கலச் சத்தமிடுகிற அதன்
கிளையடியில் நிற்கிறேன் நான்

துருவிய தேங்காயைச் சிந்தியதாய்
தும்பைப் பூக்கள் உதிர்ந்த வழித்தடத்தில்
வருகிறாய் நீ

நெல்லின் மணிகளை நெய்ததாய்
இணுக்கிச் செய்த சங்கிலி மின்னாப்பை
விஞ்சுகிறதுன் கள்ளாளச் சிரிப்பு

தட்டான்கள் திரியும் பருவத்தில்
தோன்றும் வயல் வாசனைக் காற்று
தொட்டுத் தொட்டுப் போகிறது
உன்னையும் என்னையும்

மிகக் கிட்டத்தில் விலகி நடக்கையில்
உச்சியில் ஓராயிரம் தவளைகள்
கெத்கெத்தென்கின்றன

ஒரேயொரு ஆவாரம் பூங்கொத்தை
கையளித்து விடலாம் எனினும்
மிரண்ட காளையின் கழுத்து மணியாய்
கலகலக்கிறது மனசு

ஊதாப் பூக்கள் படர்ந்த உன் முற்றத்தில்
நெருஞ்சி மஞ்சளும் விரவியதைப் போல
தைக்கிறது காதலின் துயரம்

உறக்கத்தில் கருவமரத்திலிருந்து
தவறி விழுகிற கரட்டானாய்
கனவின் உச்சாணிக் கொம்பு முறிந்து
அலறி விழுந்து கொண்டிருக்கிறேன்

நீ கையேந்தித் தாங்கிக்கொள்ள
வருவாயோ மாட்டாயோ ?

வே.ராமசாமி

Sunday, April 18, 2010





காக்கைகளும் பிள்ளைகளும்

பிடிபடா பிரதி வேறுபாடு
கண்ணுக்குப் புலனாகும்
காக்கைக் கூட்டத்தில்

எருமைக் கொம்பில் நின்றதை
எறிந்து தள்ளியவனுக்கே
அன்றைய நாளின் மகுடத்தைச்
சூட்டுகின்றனர் தெருப்பிள்ளைகள்

கடலைப் பருப்பூன்றிய
செவக்காட்டுக்கும்
தானியங்கள் காய்கிற
தருணங்களுக்கும்
அகளை வீழ்த்துபவனே
அதிகாரியாகிறான்

தோதான கிளைதேடி
கவட்டை கண்டுபிடித்து
ரப்பர் இழுத்து
மண்டையில் தெறிப்பவர்களுக்கு
மனதில் நினைப்பு
மன்னாதி மன்னன்களாக

சோளக்கொல்லையில்
தொங்கவிடும் தேவைக்கு
எவரேனும் சொல்லிவிட்டாலோ
எமனின் கீரிடத்தை
எடுத்து மாட்டுகிறார்கள்
ஊரின் புத்திரர்கள்

கால்சட்டைப் பிராயத்தை
எட்டிப்பிடிக்காத
பொடியனுக்குமுண்டு
காகங்கொல்கிற கனவு

பெற்றவனழுது பின்தொடர
பிழைப்புக்கு இவர்கள்
பெருநகரம் போகிற
பின்னொரு பருவத்தில்

ஊரின் சுற்றுப்புறங்களில்
ஒலித்திருக்கும்
அவற்றின் குரல்கள்
எங்களுக்கிருப்பது
நிரந்தரக் கிளையென்று

******** ***********

மழைச் சகதியில்
யாரோ தவறவிட்ட
சிவப்பு கெட்ச்சைப்போல
ரத்தம் கக்கிச்
செத்தான் கவிஞன்

பிரேதப் பரிசோதனை
செய்துபார்த்த
மருத்துவர்கள் சொன்னார்கள்
அவன் நெஞ்சில்
புறக்கணிக்கப்பட்ட
கவிதையன்று
புற்றுக்கட்டி வளர்ந்திருந்தது

******** ***********

செம்புல நீர்

பூமியின் தேங்காய்க்குள்
குலுங்கிய செம்புல நீர்
புழுதிச் சாலைகளெல்லாம்
பூப்படைந்தன

புல்லின்
நெற்றிப்பொட்டிலும்
கள்ளிமுள்ளின்
கண்ணாம்பட்டையிலும்
எழுதப்பட்ட
ஒரே வண்ணம்

தென்னம் ஏணிப்படியில்
சில தப்படிகள் வர
ஏறித் தோற்ற நீரலை
பொன்புளியம்பூக்கள்
மரமிருக்க
தண்ணீர் தரையிருக்க
நிகழ்ந்ததொரு
மாயமகரந்தம்

கால்களுக்குக் கீழே
மண்ணரித்துச் செல்வதோ
செங்காட்டுத் தேவதைகளின்
உச்சிமுத்தம்

கரையின் வயிற்றில்
களவு செய்வது
முட்டிப் பால் குடிக்கும்
குட்டிகளின் வாஞ்சை

பந்துகளாகி மிதக்கும்
இலந்தைப் பழங்கள்
சிவப்பு ரத்தினக் கண்கள்

தொண்ட மிடறெடுத்து
விழுங்குதல்
என் அசுர வேட்கை

என்ன உலுக்கிய பின்தான்
இருக்கிறது
நெஞ்சின் மதகு திறந்து
வீறிட்டுப் பாய்கின்ற
வெள்ளமெல்லாம்

******** ***********

நொட்டாங்கை கருணை

வாழ்வோடு ஆழமாய்
வேர்பாவ முடியாமல்
போராடிப் போராடி
ஒரு தளிரெடுத்து
வைத்திருந்த அந்தச்
சின்னஞ் சிறு செடி

காப்பாற்றுகிறேன்
பேர்வழியென்று
மூன்றாம் மாடி மீதிருந்து
நீருற்றிய நும் கருணையில்
அதன்
குறையுயிரும் போன
ஐயன்மீர்
உச்சியடிந்து

******** ***********

தெற்கு

தெற்கு என்பது
திசைகளின் கணக்கில் வராது

கன்னிப் பூங் கொடி படர்ந்த
பொட்டல்புதர்களின் சூட்டச்
சூரியனும் தாங்காது

வேலி நெற்றுக்கள்
பிற நிலாக்களாய்ச்
சடத்த தேசம்
பொன்னளந்த பொழுதுகளை
ஊழியிலும் மறக்காது

சீமக் கருவேலமரத்தில்
சேர்ந்த நூலாம்படையிலும்
பார்த்தால்தான் தெரியும்
பனியின் நீர்மை

இமை முடிகள் நரத்தை
தாய்க்கிழவியின்
சொல்மொழிகளோ
கேள்வி கேட்கும்
பருவங்களை
நிறுத்திவைத்து

மலைகளைக் கொட்டிக்
கவிழ்த்தாலும் அடையாது
தென்பொருநையின்
ஊற்று நாவுகள்

பாட்டிலில் நதியும்
கொட்டிலில் திமிறும் கன்றும்
கிழிக்கத்தான் போகின்றன
கிழக்கின் திரைகளை

மோழ நெஞ்சங்களை
அறுத்தெறியக் கிளம்புகின்றன
கத்தாழக் கிழங்குகளின்
புதிய குத்துவாள்கள்

பாதித்தழைகள் காய்ந்து
மீதித் தழைகள் பொலிந்த
வேப்பமரத்தின் வீறு
புரியவே புரியாது
இந்தச் சொற்களில்
உங்களுக்கு

******** ***********
உறைப்பு

செம்மிளகாய்ச் சரங்கள்
காய்கின்ற முற்றத்தில்
அலகைக் கொத்தி
காரக் கெக்கெரிப்பில்
கிறுகிறுத்துச் சுற்றும்
செவலைக் கோழி

வாடிப்போன பூவின்
மகரந்தச் சூலில்
உறைப்புச் சுவை கண்டு
சுழித்துப் பறக்கும்
வண்ணத்துப் பூச்சி

அடுப்பிலே
குழலூதிக் குழலூதிக்
காந்திச் சிவந்து
கண்ணிமைகளும் தீயுமெனத்
தவிப்பாள் அம்மா

துரத்திய தேன்குளவி
புருவப்பட்டையில் கொட்டி
புடைக்க வைக்காதவரை
தேன்குளவியில் காரமிருப்பது
தெரியாது எனக்கு

கேப்பக் கூழ்
கரைத்து விட்டால்
உப்பு வத்தல் இல்லாமல்
ஒத்துழைக்க மறுக்கும்
நாவின் அரும்புகள்

பழைய சோற்றுக்கும்
பச்சை மிளகாய்க்கும்
இருப்பதுபோல்
பண்டப் பொருத்தம்
வராது வேறெதற்கும்

விதவிதமாய் எத்தனையோ
ருசிபேதம் இருந்தாலும்
உறைப்புக்கு ஒரே பழம்
இனிப்புக்கு மட்டமேனோ
பழங்கள் நூறு

விட கேட்டுப்போனால்
சொல்லவில்லை
வெட்டரிவாள் ஏந்திய
சுடலைமாடன்

அவன் பாவம்
எவ்வளவு காரந்தான்
சாப்பிட்டானோ
நாக்கத் தொங்கப்போட்டு
எனக்கேம் தெரியாதென்று
வெறித்திருக்கிறான் வெளிய

- வே.ராமசாமி

Monday, April 12, 2010

கவிதைகள்

புறா வாழ்வு

எச்சங்களால்
அறியப்படும்
அதன் இருப்பிடம்
சிறுபிள்ளைகளும்
கல்லெறியும் படியானது

பழைய சோற்றை
கிணற்றுள் வீசும்
சிறுசப்தத்திற்கும்
அஞ்சிப் பறக்கும்
அவற்றின் பதற்றம்
எவ்வுயிரும் அறியாதது

முட்டைகளை
நீரில் தவறவிட்டு
மலங்க மலங்க
மின்கம்பத்தில் முழிக்கும்
நாள் முழுதும்

பொரித்ததானாலும்...
கிணற்றின் இடுப்பில்
கிளைத்த மஞ்சனத்திக்கு
தீயிடும் போதோ
உள்விழுந்த தென்னோலைகளை
அகற்றுகையிலோ
அப்பாவின் கண்பட்டு
குழம்புக்கு வரும்
குஞ்சுகள்

மறுநாள்
தாய்ப்புறாக்களின்
கேவலில் நிறையும்
கிணறு-
வே. ராமசாமி

மழைக்குறிப்பு

சிலசமயங்களில்
மழையென்று
சரியாக ஏமாற்றிவிடுகிறது
தென்னையின்
கீற்றுச் சலசலப்பு

சன்னலை
எதற்காகத் திறக்கிறார்கள்
மழை ரசிக்கவா
ஊர்ஜிதப்படுத்தவா?

கிழிசலில்லாத
குடையிருப்பவர்களுக்கு
பெருமைக்குரிய
மழைப்பயணம் வாய்க்கலாம்

பெருங்குரலெடுத்து
மழை பொழிகையில்
பட்டாம் பூச்சிகள்-எங்கு
பதுங்கி இருக்கும்?

மழைக்கான நிகழ்வு
சாத்தியப்படுகிற
இதே பூமியில்தான்
அணுகுண்டுகளைப்
பதுக்கி வைத்திருக்கிறார்கள்

இந்த வருட மழையனுபவம்
புதிதாகக் குழந்தை பெற்ற
அக்காவுக்கு எப்படி இருக்கும்?

அமிருதவருசினி வாசிக்க
அவிழ்கிறது மேகமென்றால்
மழைப்பாடல் எந்த
ராகத்தில் நிகழும்?

துருவிப் துருவிப்
பார்த்தாலும்
இருளில் பெய்த மழையின்
ஒரு துளியும்
கண்ணில் படவில்லை
- வே. ராமசாமி

இலைப் பிரகடனம்

முன்னதாக
இலை
கடலாகியிருக்க வேண்டியது

வானின் இடத்தில்
வந்திருக்க வேண்டியதும்
அதுவே

ஒருமலை போல்
விம்மிப் புடைக்க
இயற்கை
பச்சை இலையைத்தான்
தேர்வு செய்திருக்கும்

நதியெனக் கிளம்பிய
இலையொன்று
ஆதிநாளில்
ஸ்தம்பித்து திகைத்த போது
முதுகினடியில்
நரம்பு ரேகைகளைப்
பெற்றுக் கொண்டது

புளிச்சிக் கீரைகள்
தலைவிரித்த
தோட்டத்தினுள் நின்று
அறிவிக்கிறேன்
இலைகளே வானம்

முன்னாளில்
ஆத்தா-என்
தலையில்பேன் பார்த்த போது
விரல்களாய் நீண்டன
இலைகள்

முன்னத்தங்கால்
கிளை போட்டு
பின்னத்தங்கால்
தரையூன்றி
அவ்
வெள்ளாடு குடிப்பது
இலைகளின்
முலைப்பால்

இந்த
அலைவீசும் வாழ்வில்
இப்படி இலைகளில்
ஏறிக் கொண்டுதான்
அவ்வப்போது
தப்பிக் கொண்டிருக்கிறேன்

II

இலைகள்
என்னை
லேசில் விடுவதாயில்லை

கனவில்
நுழைந்து விட்டன

அழகிய நடிகையென
தன் ரூபங்களை
காட்டி மயக்கின

ஓரிலையில்
கோடிப்பக்கங்கள் உள்ள
புத்தகம்ஒன்ற
புதைந்திருந்தது

எனது
நரம்பெல்லாம்
இலைகள்அரும்பின

விடியலில்
என்னுடல்
கொடியாகி இருந்தது

இடையன்
தன் ஆடுகளுக்கு
என்னை
கட்டுவானாக
- வே. ராமசாமி

வேர் பூத்த கவிதை


உடம்பில்
சில கவிதைகள்
ஒட்டிக்கொண்டுள்ளன
ஒட்டுப்புல் போல

கண்
காது
மூக்கு
கால்
வயிறு என
ஆங்காங்கே
சில பாடல்கள்
பதிவாயுள்ளன

எங்கே தொட்டாலும்
கவிதைகள் தங்களை
வாசிக்க ஆரம்பித்துவிடும்

பாடல்களை
தங்களை முழங்க
ஆரம்பித்துவிடும்

கனவிலும் உறங்காமல்
உற்பத்தியான
கவிதையொன்று
மூளையில் கிளைத்துச்
செழித்தது

நெடுநாளாக
ஊறிக்கிடந்த
வரிகள் வேர்பிடித்து
குடல் பின்னியிறுக்கியதில்
வெளித்தள்ளி தொங்கியது
நாக்கு

அதன்
மேலும் கீழும்
அச்சாகியிருந்தன
சில-

ராமசாமி வே.


மழை வேட்டல் II

கடைசியில்
மழைபெய்தே விட்டது

வேப்பமரத்தின்
கிளைவரை
பெருகியது நீர்

பேராசை கொண்ட
மரம்
கிளைநுனியில்
தண்ணீர் குடிக்கிறது

பஞ்சிட்டானின் சிறகு
மாதமொன்றாகியும்
உலரவில்லை

சிறகு கோதியே
களைத்தன
புள்ளினங்கள்

வொவ்வொரு
சொட்டையும் விடாமல்
பருகினவென் கண்கள்

மழைநீரில்
காகிதக் கப்பலென
கிளம்பி விட்டன
அவை

குளத்தில் மிதக்கிறது
என் சடலம்

பிணத்தை
விரைவில்
அப்புறப்படுத்தாவிடில்
நான்
குளத்தைத் தூர்த்துவிடுவேன்

- வே. ராமசாமி

சிறகு

முன்னம் ஒருநாள்
காதலின் வானம் விலாவில் முளைத்தது
சிறகில் பயிர் செய்தோம்
வண்ணமயமான பூக்களை

றெக்கைகளின் நரம்புத்தடத்தில்
வேர்பிடித்துக் கிடந்தது ஆன்மம்

தாவரங்கள் பற்றிய விசாரணையின்
அடிவாரத்தில் பதுங்கிச் செழித்தது காதல்

சிறகுகளின் பெருமிதத்தில்
வாழ்வின் முனைகளின் குடைசாய்ந்து
கிடந்தேன்

இவனுக்கேன் இம்மாம் பெரிய சிறகுகள்
என
காதலை முறித்துப்போட்டார்கள்.

நானுங்கூட
அறத்தின் நீள அகல உயர விழுமியங்களில்
சிறகுகளைப் பொருத்திச் செதுக்கினேன்

இப்போது
காதல் உதிர்ந்துவிட்டது

உதறமுடியாத பெருங்கனத்துடன்
படர்ந்துகிடக்கிறது சிறகு.

- வே. ராமசாமி

பிடிமானம்

அற்புதங்களின்
பிடிமானத்தோடு கொஞ்சம்
சமாதானமாய்க் கழிகிறது
காலம்

கருவேலமரப் பிசினாய்
ஏதாவதொன்றுடன்
ஒட்ட வேண்டியிருக்கிறது

இறுகப் பற்றினாலும்
தோள் துண்டெடுத்து
உதறிவிட்டுப் போனாலும்
நிகழ்ந்துவிடும்
அபாயம் மிக்க பிரிவு

ஓணானின்
ஆராயுங் கள்ளத்துடன்
வொவ்வொன்றிலும்
தலைநீட்டிப் பார்க்க
வேண்டாம்தான்

ஆனால்
விதவிதமான கண்ணிகளோடு
திரிகிறவர்களை
என்ன செய்வது?

எவனும் எவன் கழுத்திலும்
சுருக்கு மாட்டலாமென்ற
அச்சத்தில் இறுக்கிக் கொள்கிறார்கள்
அவரவர் சங்குகளை

ஒரு சிறுகுழந்தை
பிறிதோர் குழந்தைக்கு வழங்கும்
முகாந்திரமற்ற
முத்தச்சுவையுடன்
ஒருத்தரையும்
அன்பு செய்ய முடிவதில்லை

- வே. ராமசாமி

வாழ்வறு நிலை

மனதின்
சல்லி வேர்களில்
விழுந்து கொண்டேயிருக்கும்
நிகழ்வுகளின் கோடரி

கனவுப் பொதியில்
தீப்பற்றியெரிய
கேட்பாரற்றுக் கூச்சலிடும்
ஆன்மா

பசிவாடை வீசும்
நகரத் தெருக்களில்
அலைந்த கால்களில்
பிசுபிசுக்கும் நிராகரிப்பு

துயர வெளிகளில்
நைந்து நைந்து
துளிர்விடத் தயங்கும்
நம்பிக்கை

திசைகளெங்கும்
அறைவாங்கி
துடித்துவிழும்
உயிர்ப்பறவை

இக்கவிதையே
பற்றுக் கோடானால்
கழியுமோ
பிறவிப் பெருங்கடல்

முளைக்குமோ கருகுமோ
பாலை மணலில்
புதைந்த விதையாய்
கிடக்கும் வாழ்வு

- வே. ராமசாமி

மழை வேட்டல்

நின் உதடு
பெரிது

பிரபஞ்சம் முழுவதும்
முத்தமிட ஏதுவானது

இங்கே
விசும்பும் கணம் நோக்கி
வேர்முடிச்சுகளில்
கண்ணீர் வாங்கி
புழுங்கி அழுகிறது நிலம்

வெப்பங்குடித்து
மேனி சுருங்கி
கிழவியாயின தாவர இலைகள்

நீர் வேட்கையில்
வியர்வைத்துவாரம் அடைந்து
நாற்றமெடுக்கிறது
மனிதர் குருதி

தகிக்கும் கதிரொளியில்
உன் நீர்மைத் துளிகளைக் கண்ணுற்று
கழுத்தை நெரித்து பெய்யச் சொல்ல
இயலாத நான் -

வாடிய புளியமரத்தடியில்
ஈரத்துணியாய் என்னை
கசக்கிப் பிழியுமுன்

நீ
பொழி
பேரோலமெடுத்து
முத்தமிடு!-

வே. ராமசாமி

நெருஞ்சிச்சாமி

மாவுருண்டைக்குப்
பேர் போனது
வடக்கத்தி அம்மன்

மாவில்
கண் வைத்து
அருள் கொண்டாடுகிறார்
நமது
சாராயங்குடித்த
சாமியார்

ஆடிய ஆட்டத்தில்
நெருஞ்சிமுள்ளில்
தவ்விக்
குதித்தும் விட்டார்

பின்பு
ஆவேசம் போன
இடந்தெரியாமல்
உள்ளங்கால்களை
தரையில் தேய்த்து
ஆடி மேற்செல்கிறார்

- வே. ராமசாமி

மலையாங்குளம் 1


தவளைகளைப்
பெய்கிற மழை

கொக்குகள்
காய்க்கிற மரம்

சாரைகள்
கண்ணுறங்கும்
நெடுவயல்

தானியம்
நிறைந்த குதிர்

தோள் தூக்கிச்
சுமக்கும்
தாய்மாமன்

காசுதருகிற
அத்தை

தாயமிடும்
அவள் மகள்

தம்பியின்
ஈரக்காலில் இறங்கிய
கருவமுள்ளை
கிளறியெடுக்கிற
அக்கா

ஊர்தாங்கி
நிற்கிற ஆல்

கரிந்து திமிர்ந்து
மேற்பார்வைசெய்யும்
பனைகள்

கைகாட்டி
முன்னேகும்
வரிசைப்
புளியமரங்கள்

வாழைத் தோப்பின்
இலை விரிந்து
மூடிய வானம்

தரைக்கு
ஒருசாண் மேலே
நேர்க்கோட்டில் பறந்து
ஈசலை
இரையெடுக்கும்
தைலான்

தானியம்
உடைத்து உடைத்து
பூமி சுற்றாவிட்டாலும்
தான் சுற்றும்
திருவைக்கல்

வடக்கே
வாழவந்த அம்மன்

தெற்கே
ஆனைக்காரன்

மேற்கே
கூடாரத்தம்மா

கிழக்கே
உச்சி உடையார்

நாலுபுறமும்
குளங்கள் சூழ்ந்தாலும்
ஒன்றின் பெயர்
ஊருக்கானது
மலையாங்குளம்

வே. ராமசாமி
-

மலையாங்குளம் 2

எருக்கிலையும்
இலந்தையும்தவிர
எல்லாமிழந்தது
பூமி

தீனியில்லாத
சினைப்பசுவொன்று
குப்பையில்
ஊதிச் செத்தது

ஊர்
காக்கிற அம்மன்
கட்டமன் ஆனாள்

ஆல்
தங்காத ஊரில்
அருகம்புல்
தங்குமா?

பனை
தங்காத ஊரில்
பச்ச நெல்லு
தங்குமா?

சொலவடை
சொல்கிற
பெருசுகள் மனசு
கூமுட்டையென
கலங்கிக் கிடக்கும்
பிள்ளைகள்
வாழ்வு நினைத்து

அபலை
கண்ணென
மஞ்சள் பூத்தது
வெள்ளாட்டின் கண்

முன்னோர்
ஆத்மா வாழும்
பெருமரங்கள்
மொட்டையாகின

ஊரில் பாதி
கிரையமானது
ஜெயவிலாஸ் மில்லுக்கும்
ஈரோட்டுக்காரனுக்கும்

உச்சந்தலை
ஊன்றி நின்றாலும்
தலை நனையாத
கிணறுகள் காய

தரைதளிர்த்துக்
கிடக்கின்றன
பரம்பரை நிலங்கள்

எலிப்பொந்தில்
இறங்கிய நீரென
புகுந்த வறுமையில்
திசைக் கொருவராக
தெறித்தோடினர்
வாரிசுகள்

பழகிய காடுகளில்
ஆவிவெந்து
அலைகிறார்கள்
அன்னைமார்கள்

- வே. ராமசாமி

நதியாடல்

உதட்டு முத்தம் பட்டு
நழுவியோடுகிற தேவதையின்
வண்ணம் நீலம்

அவளின்
உள்ளிறங்கி நீராடும்
என் தலைமீது செல்லும்
மாநதி

நடந்து வந்த பாலை
தெப்பமாகித் தெவங்கும்
இவ் ஒட்டகம்

வெங்காட்டின்
சிறு பறவைக்கு
நீர்ச்சுனை
இடதில் ஒரு சிறகு
வலதில் ஒரு சிறகு

குழி நீரில்
குளித்த கருங்காகம்
சமுத்திரத்தின் கிளையில்
கட்டியது கூடு

நரம்புகள் தோறும்
நதிகள் ஊறி
திசைகள் குழம்பி
மோதித் தெறிக்கிறது
துளி

வான் மட்டும் மேவி
மேலும் பரவும் தண்ணீர்

இப்போது
பிரபஞ்ச நீர்மத்தில் மிதக்கிற
நிலா நான்.

- வே. ராமசாமி
ஏன்

சில முகங்களை
கண்டவுடன்
எரிச்சல் வருகிறது

அம்மா
பார்த்து வைத்திருக்கிற
பெண்னெனில்
அறவே பிடிப்பதில்லை

பட்டணம் வாத்தியாரின்
மேசையிலுள்ள
பூமி உருண்டையை
ரெண்டா
உடைக்கத் தோன்றும்

அதுவும் குறிப்பாகத்
தேங்காய்மாதிரி

இப்படியாப்பட்ட
எண்ணங்கள்
எங்கிருந்து
வருகின்றன

ஏன்
வருகின்றன?-

வே. ராமசாமி

நூற்றாண்டுத் தாகம்

நீங்கள் நீரில்
உழவு செயபவர்கள்

நதிப்புனலில்
சவப்பெட்டி தயாரித்தே
பழக்கப்பட்டவர்கள்

சம்சாரிகளின்
கால் வெடிப்பாய்
ஆறுகிடந்தபோது
உங்களில் ஒருவனையும்
காணவில்லை

பச்சை ஆட்டுப்புழுக்கை
இரும்பாய்க் காய்ந்த கோடையில்
துளி நீரில்லை எமக்கு

முழுதாய் குடல் நனைய
வழியின்றி அலறும்
பசுவின் குரல் கேட்டதில்லை
உம் காதுகள்

எம் ஆத்தாக்கள்
அலற அலற
சொசைட்டிக் கடன்கேட்டு
கதவு உடைத்த
நீங்கள் கூப்பிட்டா
புறப்பட்டது நதி

உம் உள்ளங்கையில்
ஒரு போதுமில்லை
மேக அயனிகள்

நதி திரட்டி வந்தது
மழைத்தாய் மட்டும்

பின்னொரு நாளில்
கசியாமல் நீர்தேக்க
பெருந்தன்மையுடன்
திறந்து கொள்ளும்
மதகுகள் மேவி
புரளும் வெள்ளத்தில்
தீருவதில்லை
எம்நூற்றாண்டுத் தாகம்.

- வே. ராமசாமி

பம்பரம்

ஒருபோதும்
பேருந்துப் பயணம் செய்ய
வாய்ப்பேயில்லாத
கலைவாணன் பயல்
ஆணி மினுமினுங்கும்
பம்பரத்தை
மல்லாக்க வைக்கிறான்
கோயில்பட்டி ரோட்டில்

- வே. ராமசாமி

வண்ணத்துப் பூச்சிகள் துரத்த ஓடியவன்

கொலைக்கரங்கள்
வாய்த்த பால்யம்
எனது

செவக்காட்டில் மூச்சுமுட்ட
அம்மா புடுங்கி வந்த
புளியங்குறண்டியால்
பட்டாம்பூச்சிக்குக் குறிவைப்பேன்

ஏதேனும்
துத்திப்பூவில் தேனுறிஞ்சுவதை
பதுங்கிச் சென்று அறைகையில்
மெளனஓலமிட்டுச் சரியும்

துண்டிக்கப்பட்ட பல்லிவாயாய்
துடிதுடிக்கும் அதன் சிறகு பிய்த்து
மீண்டும் முளைக்குமோவென
கடாப் பெட்டியிலடைக்க
எறும்புகள் மொய்த்துச்
செத்துக்கிடக்கும் மறுநாள்

மூணுவேளைச் சோற்றுக்கென
வேதப்பள்ளியில் சேர்க்கப்படும்வரை
வெள்ளை மஞ்சள் சிவப்பு என
அவற்றின் பின்னால்தான்
அலைந்து கொண்டிருந்தேன்

அப்புறம்தான்
ஓடவேண்டியதாயிற்று
எதிர்ப்படும் நிறங்களிலிருந்து
உயிர்த்தெழும் வண்ணத்துப் பூச்சிகள்
துரத்தத் துரத்த

.- வே. ராமசாமி



உன் அம்மாவின் உபாயங்கள்

வருகிற
விடுமுறை தினத்தில்
ஊன்றவிருக்கும் புதிய செடிகள் பற்றி
கூறுகையில்
கருப்பட்டி தின்ன நாயாய்க்
குமைகிறாய்

கோரைப்புற்களை
எருமைகள் மேயும்
பிரதேசத்திலிருந்து வந்தவனிடம்
பால்சம் ஏஞ்சல் அரேலியோ என
இங்கிலீஸ் பூக்களாய்
பட்டியலிடுகிறாய்

நான்
மகிழிக் கீரையின்
கூம்பு வடிவிலான வெண்மலரை
எடுத்துரைக்க
பெருமிதம் நொறுங்கித் தவிக்கிறாய்

ரம்பங்களால் அறுபட்டு
டமாரெனச் சரியும்
மரங்களுக்காவும்
புற்களின் சிரசுகள்
முறிபடுவதற்காகவும்
ஆழ்ந்த துயரங்களை
சமர்ப்பிக்கிறாய்

மேலும்
மிக முக்கியமாக
அறியாமல் விட்டிருக்கிறாய்
என்னை
ஆள்வைத்து நையப்புடைத்தல்
காவல்துறையிடம் புகார் செய்தல்
வேலையைவிட்டு நீக்குதல்
முதலான
உன் அம்மாவின் உபாயங்களை

- வே. ராமசாமி

சேலை

இலவசச் சீலைன்னு
இளிச்சுட்டுப் போனாக்க
மட்டித் துணியொன்ன
மடியில் கட்டிட்டான்

ஒருநா உடுத்திட்டு
ஊற வெச்சாக்க
ஊதா போனதய்யா
UNMAI THRINCHATHAIYA

பஞ்சிட்டு நெஞ்சாகளா
முள்ளுட்டு தச்சாகளா
உசிர அரிக்குதய்யா
எரிச்சல் எடுக்குதய்யா

மாருச்சீலைன்னு
மக்கள் நெனச்சாக்க
வரிச்சீலை தானென்று
உருண்டு திரண்டதய்யா

ரேசங்கடைக்காரன்
புடுங்குன பத்துக்கும்
பெறுமானம் இல்லைய்யா
பெற்ற பொருளய்யா

மாத்துஉடை கேட்டு
மனசு தவிக்கையிலே
இனாஞ் சேலையிலும்
எஞ்சோகம் தீரலையே

சீலைப் பேனுங்கசீ
வனக் குடிக்கும்படி
சீலையில்லா தந்திருக்காக
சீமையில இல்லாத சீல

ஒருமுந்தி உடம்புல
மறுமுந்தி மரத்துல
உடுப்புக்கு ஒத்தச்சீல –
என்இடுப்புக்கு ஏதுமில்ல-

வே. ராமசாமி

மிருகக்காட்சி சாலையில்

தனிமையின்
வெகு உள்ளிறங்கித்
துயின்றிருந்தது முள்ளம்பன்றி

தனது
நீர் வற்றிய கிணற்றினுள்
ஏதோ செய்யும்
உழவனின் பாவனையில்
அதன் லயிப்பு

முட்கள்
பெருமரங்களாகச் செழித்த
ஒரு கனவில்
மாமலை போன்ற கிழங்கைச்
சுகித்துக் கொண்டிருக்கும்
அதற்கு
சாலை ஊழியன்
இக்
காங்கிரீட் கிடங்கில்
வைத்துவிட்டுப் போன
முட்டைக்கோசு
எம்மாத்திரம்

ஈயத்தட்டில் சமுத்திரத்தை
நிரப்பி வைத்தாலுமென்ன

வெட்ட வெளியில்
நாக்கைச் சுழற்றி
பூர்வீக கானகத்தின்
சுனையை அது
பருகிக் கொள்ளும்

வேறு கூண்டு நோக்கி
துரிதப்படுத்தும்
காவலாளி சொல்கிறான்
உனது கண்களில்
முள்ளம்பன்றியின்
முட்கள் தைத்ததோவென

திடுக்கிட்டு
நகரும் கால்களை
வரவேற்று நிற்கும்
புலியின் தனிமை
---------------



ஆனைபோல்
உசரமிருந்தாலும்
வரப்பேற முடியாது
நெல்லறுக்கும்மெசினுக்கு

- வே. ராமசாமி

கோலிக்காய் கோட்பாடுகள்

அவரவர் வீட்டுப்பக்கம்
ஆட்டக்களம் அமையுங்கள்
சச்சரவுகளின்போது
அம்மாக்கள் வந்து
தீர்ப்பளிக்க ஏதுவாக

ஆடு மேய்க்க
அடம் பிடிக்க
மாடு பத்த
மறுக்க

இன்று
உவ்உவ் ஊதா
மஞ்சமஞ்ச மஞ்சை
நெத்தச்சிவப்பு
புத்தம்புதுக் கடசல்கள்
நேருக்குநேர் மோதல்

மழையைச் சபிக்க

டங்கான் கடன்
வெறும்பையோடு
வீடுதிரும்பல்

நீங்கள் ஆடும்போது
கசடுபவனை
நன்கு கவனிக்க

பித்தி போடாதே
ஏத்துங்கட்டு
கொழுவி விடாதே
உச்சிப்பிடி

கடைசிக்காய்
என்றாலும்
கை நடுங்காதே

மெத்தினால்
போட்டு வைக்க
காக்கிடவுசர் அணிக

உப்புக்குச் சப்பாணியை
துரத்தியடிக்க
கோலிமாயமாகும்
அபாயங்குறிTTHU

நூறுகோலி
வைத்திருப்பவன்
இல்லந்திறந்திருக்கும்
நேரம் அறிக
அவன் வீட்டுப் பரணயில்
புதையல் எடுக்க

உங்கள்
உலைமூடி நிறைந்த
கோலிச்செல்வங்களை
கிணற்றில் வீசிய
அப்பன்களின்
நெற்றிப் பொட்டைப் பெயர்க்க

இயலாதோர்
அண்டர் வேரையாவது
ஒளித்து வைக்க

வீட்டில் எதிர்ப்புள்ளோர்
வேலிமரத்தடியில் புதைக்க
கோழி கிளறிஎல்லாம்
பொதுவுடமை

ஒருகோலி = பத்து இலந்தைப்பழம்
பத்துக்கோலி = ஒரு உழக்கு புளியமுத்து
கோலி = திருச்செந்தூர்க் கடல்

- வே. ராமசாமி

கோழி V/S பருந்து

கோழிக்கு
பூஞ்சிறகு

ஆகவே இனி
பூவிதழில்
காது குடையாதீர்

பூவின்
இதழ் விரித்து
பறக்கவும் முடியாது

பருந்து
ராட்சசன்

அரக்கன்
இரும்பில்சிறகானாலும்
பறப்பான்

கோழிக்குஞ்சுகள்
பூக்குட்டிகள்

பூங்குட்டிகளை
கொத்தி வாழும்
கள்ளிப் பறந்து

கோழி
காளி

குஞ்சு தூக்க
இறங்கிய கழுகை
கொத்தி வீழ்த்தினாள்
எங்களூர் காளியாத்தா

ஆகவே இனி
நெருப்பிதழில்
காது குடையாதீர்
-----------------
இது
அடுக்காது

இவ்வளவு பெரிய
அயோக்கியனாக
இருந்துகொண்டு
பச்சைத்
தென்னங்கிளையின்
அண்மையில்
நின்றல்லவா
போட்டோ பிடிக்கிறாய்

- வே. ராமசாமி

Saturday, April 3, 2010

தீ


செல்லும்
திசைஎல்லாம்
ஊழித்தீ
பிடித்து துரத்தினாலும்
பூத்து வெடிக்கிற
ஒரு பொழுதுவரை
பத்திரமா இரு

என் கனவே நீ

Thursday, March 11, 2010

சூரிய விரோதம்

கருந்தோல்
வெயில் அங்கி

உடல் கன்றிச் சிவந்து
ஒளி குடிக்கும் தாவரம்

சிறு களைகொத்தியுடன்
தன் நிலம் திருத்தித் தவழும்

உடல் சுக்கென
வற்றி வதங்கிய
பெருந்தெய்வம்
என் அன்னை

பனை தாங்கும்
வெப்பம்
தான் தாங்குமவள்
சரீரம் பூத்த
வியர்வையையும் விடாமல்
நக்கி உறிஞ்சும்
கொடுஞ் சூரியன்

கைக்குக் கிடைப்பானெனில்
இவ் அரிவாளால்
வெட்டித் தரிப்பேன்
ஒரு சுள்ளி போலே

வே.ராமசாமி

Sunday, March 7, 2010

வெள்ளைமுடி அழகி

சேற்று வயலில்
கைக்களை பறித்து
நகங்கள் பத்தும்
சாகக் கண்டாள்

கோடையில் வெடித்த
மின்னலை எடுத்து
பித்தக் கால்களில்
பதுக்கி இருந்தாள்

கோழியைக் கவ்வும்
கீரியைத் துரத்தி
உறக்கமில்லாத
விடியலைக் கடந்தாள்

ஒத்தையடிப் பாதையில்
நடந்து நடந்து
ஒத்தையில் வரைந்தாள்
ஒத்தையடிப் பாதை

முந்தியில் முடிந்த
விதைகளையூன்றி
பருவம் பிறளா
உலகை நடத்தினாள்

நூறு மல்லிகைசெடியிலும்
ஒருமொட்டும் தப்பாமல்
உன்னிப்பாய் எடுத்து
சந்தையில் சேர்த்தாள்

முற்றிய வயதிலும்
புஞ்சைக்கு போவதில்
முந்தத் துடித்தாள்
முயலின் வேகத்தை

முற்றும் நரைத்தும்
நெஞ்சுக்கு வைரமேற்றி
வாழவைக்கிறாள்
அம்மா என்கிற
வெள்ளைமுடி அழகி

வே.ராமசாமி